ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது: அமைச்சர் காமராஜ்
ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை அரசு தடுக்காது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: பொது மக்களுக்கு இடையூறு இன்றி ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சித்திரை பொளர்ணமியையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ர குப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். சித்ர குப்தர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
குடும்ப அட்டைகளுக்கு வழங்க 52 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு வழங்கி வந்த மத்திய அரசு தற்போது 17 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்து உள்ளது. அதற்கு காரணம் அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதால் இந்த குறைப்பு நடவடிக்கை எடுத்து இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும் தமிழகத்தில் மண்ணெண்ணெய் தேவைப்படும் இடங்களுக்கு முறையாக தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற போராட்டத்தை தமிழக அரசு தடுக்காது. அதை மீறி பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக இருந்தால் அதில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு இடையூறான பிரச்சனை யார் ஏற்படுத்தினாலும் அதற்குண்டான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஜனநாயக முறைப்படி எந்த போராட்டம் நடைபெற்றாலும் அரசு அனுமதிக்கும்.இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.