தீபாவளிக்கு குடிமகன்களை குறிவைக்கும் டாஸ்மாக் : ரூ.500 கோடிக்கு மது விற்க இலக்கு?
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் மூலம், தினசரி சராசரியாக, 68 கோடி ரூபாய்க்கும், ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாளில், 95 கோடி ரூபாய்க்கும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாளில், 100 கோடி ரூபாயை எட்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனையை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 தீபாவளி பண்டிகை நாளில் 142 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில், 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அடுத்த நாள், 100 கோடி என, 342 கோடிக்கு மது விற்பனை நடந்தது.
கடந்த 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும், மது விற்பனை குறையவில்லை. கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை நாளில், 200 கோடி ரூபாய்க்கும், அதற்கு முந்திய நாள், 150 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி 500 டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளை மூடியது. எனினும், மது விற்பனை குறையவில்லை, கடைகள் மூடப்பட்டபிறகும் மது விற்பனை 10 சதவீதம் அளவு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபான கடைகளில் குறைந்த பட்சம் 1 வாரத்துக்கும் அதிகபட்சம் 15 நாட்களுக்கும் தேவையான மதுபானங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டாஸ்மாக் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இவ்வார இறுதிக்குள் தேவையான மதுபான பெட்டிகளை குடோன்களுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை சனிக்கிழமையிலும், அடுத்த நாள் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையும் என்பதால், இரண்டு நாளில் மட்டும், 300 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்க வாய்ப்புள்ளதால், நடப்பாண்டில், 500 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.