சசிகலா வழியில் தினகரன் சகோதரி சிறையில் சொகுசு வாழ்க்கை-நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலம்
சசிகலாவை போலவே தினகரனின் சகோதரியும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவியும் அவரது கணவர் 'ரிசர்வ்' வங்கி பாஸ்கரனும் சிறையில் சொகுசாக இருக்க நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.
தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கர் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றது இந்த வழக்கு விசாரணை.
இந்த விசாரணை முடிவில் ஸ்ரீதளாதேவி, பாஸ்கர் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரையும் சரணடைய சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இருவரும் இழுத்தடித்து வந்தனர்.
பின்னர் சரணடைந்த இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே உடல்நிலை சரியில்லை என கூறி இருவரும் உறவினர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பான புகார்கள் அரசுக்கு சென்றது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்து இருவரும் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தது தெரியவந்தது.,
தற்போது கூடுதல் கண்காணிப்பாளர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலாவும் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சொகுசாக இருந்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.