நீர் ஆவியாகாமல் இருக்க இங்கே தெர்மாகோல்... குஜராத்தில் 'வேற லெவல்'
தமிழகத்தில் வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மகோல் பயன்படுத்தும் நிலையில், குஜராத் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
சென்னை : கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வைகை அணையின் நீர் வெப்பமாதலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை சமூக வலைதளங்கள் விமர்சித்து வருகின்றன.
தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மகோல்களைக் கொண்டு மூட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் அமைச்ச்ர செல்லூர் ராஜு தலைமையில் நேற்று தெர்மாகோல் போடப்பட்டது. ஆனால் மூடப்பட்ட அனைத்து தெர்மா கோல்களும் போடப்பட்ட சில நிமிடங்களிலேயே காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கியது. இதனால் அரசின் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
இங்கே தெர்மகோல் கொண்டு மூடும் பணியை மேற்கொள்ளும் இதே வேளையில் குஜராத்தில் கால்வாயை தொழில்நுட்ப முறையில் மூடி காரியம் கனக்கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத்தின் மேஹ்சனா கிராமத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கால்வாயின் நீர் ஆவியதை தடுக்க கால்வாய்க்கு மேல் சோலார் பேனல்கள் போடப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக செய்யப்பட்ட இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.
சர்தார் சரோவர் திட்டத்தின் ஒரு அங்கமான சனந்த் கிளை கால்வாயில் 750 கிலோ மீட்டர் தொலைவில் செய்யப்பட்ட சோலார் திட்டம் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. 2012ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதோடு, 90 லட்சம் லிட்டர் குடிநீர் நீராவியாவதும் தடுக்கப்படுகிறது. இந்த செய்தியை வைத்து சமூக ஊடகங்களில் கருத்து மேசேஜ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.