விடை எழுதிட்டு அடிக்க கூடாது... எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை!
சென்னை: தேர்வு அறைகளில் பிட் அடிக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிப்பார்கள். ஆனால் விடைத்தாளில் எழுதிய விடைகளை அடித்து வைத்தால் இனி 2 பருவ தேர்வுகள் எழுத முடியாது என்று எச்சரித்துள்ள அரசு தேர்வுத்துறை. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில் மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடிக்கக் கூடாது உத்தரவிட்டு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை:
''பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைய உள்ளது. தேர்வுகளை சிறப்பாக நடத்த அனைத்து முன் ஏற்பாடுகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயலானது இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும். அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்து வரும் இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது. இது ஒரு தண்டனை.
இதை அனைத்து மாணவர்களும் அறியும் வண்ணம் பள்ளிக்கூட பிரார்த்தனை கூடத்தில் கண்டிப்பாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆண்டு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் தமது ஆளுகைக்கு உட்பட்ட தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை தேர்வு மைய வளாகத்திற்குள் (ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பார்வையாளர்கள், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்) கண்டிப்பாக வரக்கூடாது. அப்படி மீறி வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத்தேர்வு முக்கியத்துவம் கருதி ‘தேர்வு அவசரம்' என்ற வாசகத்தை தாளில் அச்சிட்டு வாகனங்களில் வழித்தட அதிகாரிகள் ஒட்ட வேண்டும். வழித்தட அதிகாரிகள் தங்கள் வழித்தடத்தில் உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் செல்போன் நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.