கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 248 வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட 248 வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 248ஐ திரும்ப பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவ்வாறு தமிழக அரசு வழக்குகளை திரும்ப பெறவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பின் தலைவர் பீட்டர்ராயன் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில், 349 வழக்குகளில் 248ஐ திரும்ப பெறுவதாக அறிவித்த தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாரயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட 248 வழக்குகளை 4 வாரங்களுக்குள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. வழக்குகளை வாபஸ் பெற்றதற்கான அரசாணை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அதில், 248 வழக்குகளில் 213 வழக்குகளை திரும்ப பெற்றதற்கான அரசாணை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்று வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர்.