20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்- சென்னையில்!
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் இணைந்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும், 5 வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை சம்பளத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் குமாரவேல் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.