மெக்கா சென்றுள்ள 3415 தமிழக ஹஜ் யாத்ரீகர்களும் நலமாக உள்ளனர் - ஹஜ் கமிட்டி
சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை சென்ற 3415 யாத்ரீகர்களும் நலமாக, பாதுகாப்பாக உள்ளதாக ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவில் பெரிய மசூதியில் விரிவாக்கப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் நேற்று திடீரென முறிந்து விழுந்த கோர விபத்தில் 107 பேர் சிக்கிப் பலியானார்கள். இந்த பயங்கர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 15 இந்திய யாத்ரீகர்கள் காயமடைந்தனர். இறந்த 2 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்தால் தமிழகத்திலிருந்து யாத்திரை சென்றவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். ஆனால் தமிழக யாத்ரீகர்கள் யாருக்கும் ஏதும் ஆகவில்லை என்றும் அனைவரும் பாதுகாப்பாக, நலமாக உள்ளதாகவும், தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.
இதுபறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து மெக்காவுக்கு 3,415 பேர் ஹஜ் பயணம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மெக்காவில் நடந்த சம்பவம் குறித்து அறிய இந்தியாவில் இருந்து 4 பேர் குழு சென்றுள்ளது. அவர்கள் அங்குள்ள நிலவரம் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார் அபுபக்கர்.