அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11 தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும்- தமிழக அரசு
சென்னை: மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் மாதம் 7ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும். இதற்காக தயாராகி வந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.
விடாமல் பெய்த கனமழையால் வட கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மாணவர்களின் பாடப்புத்தகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல மாணவர்கள் முகாம்களில் குடும்பத்துடன் குடியேறினர். பள்ளிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 33 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டன. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள தேர்வுகள் ஜனவரி முதல்வாரம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மனு தள்ளுபடி
இதனிடையே மழை வெள்ளத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வு ஒருமாதம் கழித்து ஜனவரியில் நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.