தமிழகத்தில் எல்லா துறைகளையும் விட சுகாதாரத்துறை தான் மிக மோசம் : திருநாவுக்கரசர்
தமிழகத்தில் எல்லா துறைகளையும் விட சுகாதாரத்துறை தான் மிக மோசமாகஇருப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மற்ற துறைகளை விட சுகாதாரத்துறை மிகவும் மோசமான
நிலையில் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தமிழக சுகாதாரத்துறையின்
செயல்பாடுகளை விமர்சித்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் செயல்பட்டு வந்த போதிலும் தமிழக மக்கள் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இல்லை என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. 2015-2016 ஆண்டை அடிப்படையாக கொண்டு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளில் 51 சதவீத குழந்தைகள் ரத்த சோகையோடு உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற கர்ப்பிணிகளில் 52 சதவீத பேரும், 15 வயது முதல் 49 வயது
வரை உள்ள பெண்களில் 19 சதவீதம் பேரும், ஆண்களில் 16 சதவீதம் பேரும் ரத்த
சோகையோடு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்போர்
அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டாலும், தமிழகத்தின் அவலநிலை தொடர்வது ஏன்?.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 67 சதவீதம்
பேரும், தமிழகத்தில் 77 சதவீதம் பேரும் திறந்த வெளியை கழிப்பறையை
பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்றுநோய் சுலபமாக பரவுவதற்கு வாய்ப்பு
உருவாகிறது. இந்தப் பின்னணியில் என்ன உணவு உண்டாலும் ஏழை, எளிய மக்களின் நலவாழ்வு மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை.