நாமக்கல் சுப்ரமணியத்திடம் கடைசியாக தொலைபேசியில் பேசியது யார்?... விசாரிக்குமா போலீஸ்!
நாமக்கலில் தற்கொலை செய்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியத்தின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நாமக்கல்: வருமான வரித்துறை சோதனை நடந்த ஒரு மாதத்திலேயே அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான கான்டிராக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவர் கடைசியாக யார் யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற தகவல்கள் திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த சுப்ரமணியன், அரசு கட்டிடப் பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளையும் சுப்ரமணியன் பார்த்து வருகிறார், இதனாலேயே கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது சுப்ரமணியத்தின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனையின் போது சுப்ரமணியத்தின் வீட்டில் இருந்த சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும், தொடர் நடவடிக்கையாக சுப்ரமணியத்தின் வங்கி கண்குககளும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுகாதராத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர்விஜயபாஸ்கர் மூலம் கட்டிடப் பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்ற வகையில் பெரும் லாபம் பார்த்துள்ளாராம் சுப்ரமணியன்.
முக்கிய ஆவணங்கள்
சுப்ரமணியன் மூலமாகவே பல முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு சிக்கியுள்ளதாகவும் இதனால் கடந்த சில நாட்களாகவே அவருக்கு பல நெருக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த டிரைவரை வேண்டாம் என்று சொல்லிட்டு தானே காரில் ஏறி மோகனூர் அருகேயுள்ள செவிட்டுரங்கன்பட்டியிலுள்ள தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார் சுப்ரமணியன்.
சகஜமாக வந்த சுப்ரமணியன்
பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுடன் சகஜமாகவே பேசிவிட்டு பண்ணை வீட்டிற்குள் சென்றுள்ளார் சுப்ரமணியன், சிறிது நேரத்தில் அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதில் இல்லாததால் பண்ணையாட்களை அனுப்பி பார்த்த போது அவர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாராம். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்த போது சுப்ரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர்.
திடீர் தற்கொலை ஏன்?
இந்நிலையில் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுப்ரமணியத்தின் மகன் மோகனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்த சுப்ரமணியத்தின் வயிற்றில் விஷம் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பண்ணை வீட்டிற்கு சாதாரணமாக சென்ற சுப்ரமணியன் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன?, காரில் அவர் தனியே பயணித்து வந்த போது அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் யார் என்பதையெல்லாம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரமணியத்தின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மூடி மறைக்கும் வேலையா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த மாதம் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில், சுப்ரமணியம்தான் வருமான வரித்துறையின் முக்கிய டார்கெட்டாக இருந்தாராம். அவர் மூலமாகப் பணம் வரும் வழியைக் கண்டுபிடித்த அதிகாரிகள், தொழிலைச் செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழில் ரீதியாக சுப்ரமணியத்துடன் தொடர்பில் இருந்தவர்கள்கூட விலகிச் சென்றதோடு, அமைச்சர் சிக்கலில் சிக்க முக்கிய காரணமாக சுப்ரமணியன் இருக்கிறார் என்று கருதப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.