சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சர்ச்சை
பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலளித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு பேசியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் 19 முதல் 5 நாட்களுக்கு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சட்டசபையில் சிறப்புத் தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாலை தொடங்கி இரவு வரை எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை முடித்து வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கேள்வி எழுப்பப்பட்டது. தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபரின் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
பெண் நிருபர் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து சக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது சர்ச்சை பதில் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே தான் அவ்வாறு கூறியதாகவும், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பத்திரிக்கையாளர்களையும் தான் மதிப்பதாகவும், அனைவருமே தனது சகோதர, சகோதரிகள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண் நிருபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வருத்தத்தை தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். துறை சார்ந்த கேள்விகளை நான் எப்போதுமே தவிர்த்ததில்லை, ஆனால் அரசியல் சார்ந்த கேள்வி என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே அந்த பதிலை அளித்ததாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.