அன்று சாதிக் பாட்சா.. இன்று சுப்ரமணியம்.. தொடர்கதையாகும் அரசியல் புள்ளிகளின் நண்பர்கள் மர்ம மரணம்!
ஊழல் முறைகேடுகளில் சிக்கும் அரசியல் முக்கிய புள்ளிகளின் நண்பர்களின் மர்ம மரணம் தொடர் கதையாகி வருகிறது.
சென்னை : 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டது போல தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் சுப்ரமணியம் நாமக்கலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நாட்டின் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரம் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறை சென்ற முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரெனக் கருதப்பட்ட சாதிக் பாட்சா கடந்த 2011ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பாட்சா நிறுவனம்
2ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவும், சாதிக் பாட்சாவும் மத்திய அரசால் விசாரிக்கப்ப்டடு வந்தனர். ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ஆ. ராசா அமைச்சரான பின்னரே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இன்று வரை சந்தேகம்
தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் வீட்டிலிருந்து 4 கடிதங்களை அப்போது காவல்துறையினர் கைப்பற்றினர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை தானே எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு மர்ம மரணம்
இதே போன்று நாமக்கலை நேர்ந்த ஒப்பந்தததாரர் சுப்ரமணியம் இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியம் நாமக்கலில் அரசு கட்டிட ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தவர்.
ஐடி ரெய்டு
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது சுப்ரமணி வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. விஜயபாஸ்கரின் அனைத்து ரகசியங்களும், தொழில்முறை பரிமாற்றங்களையும் அறிந்தவராக கருதப்படும் சுப்ரமணியத்தின் மர்ம மரணம் இன்னொரு அரசியல் மர்ம மரணமா என்ற கேள்வியை விதைத்து விட்டு சென்றுள்ளது.