பாரதியார் பல்கலை. ஊழலில் உயர் கல்வித் துறை அமைச்சரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
பேராசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கைது செய்யப்படவேண்டும் என ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
பேராசிரியர் பணி நியமனத்திற்காக ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஊழலுக்கு தரகராக செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து துணைவேந்தர் கணபதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பேராசிரியர் நியமனத்தில் ஊழல்
அந்த அறிக்கையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழலில் துணை வேந்தர் கணபதியைத் தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேராசிரியர் நியமன ஊழல்கள் தொடர்பாக துணைவேந்தர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் நிலையில் உள்ளவர்களை கைது செய்து வரும் காவல்துறையினர், இந்த ஊழலில் அதிகாரப்படிநிலையின் உச்சத்தில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்படவில்லை
இந்த தகவல்களின் அடிப்படையில் கையூட்டுத்தடுப்புப் பிரிவினர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அமைச்சர் ஒருவரையும், முன்னாள் துணைவேந்தர் ஒருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை பணி நீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை. அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் பங்கு
ஆனால், கணபதி சிறையில் அடைக்கப்பட்டு இரு நாட்களாகியும் அவர் இடைநீக்கம் செய்யப்படாதது இவ்வழக்கு எந்த திசையில் பயணிக்கும் என்பது குறித்து எதிர்மறையான யூகங்களை ஏற்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கழக நியமன ஊழல் என்பது புதிதாக முளைத்த விஷயமல்ல. 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது தான். இந்த ஊழலில் முழுப்பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்து, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பது தான் உயர்கல்வித்துறையை தூய்மைப்படுத்த உதவும். மாறாக பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளை பிடித்து விட்டு, பெருச்சாளிகளை மிகவும் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது புதுப்புது வடிவங்களில் ஊழல்கள் தலையெடுத்து தழைத்தோங்கவே உதவும்.
அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும்
பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அனைத்துக்கும் மூலமாக இருப்பதும், இருந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக ஊழல்களை களைய முடியாது. எனவே, தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை தூய்மைப்படுத்துவதற்காக
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பாரதியார் பல்கலைக்கழக ஊழலில் சம்பந்தப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
பாமக சார்பில் வழக்கு தொடரப்படும்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் வழங்குவதற்கு வெளிப்படையான புதிய முறை உருவாக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழக ஊழல்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதற்காக மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தாமதம் செய்தால் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.