சஸ்பெண்ட் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி! ரகசிய ஆலோசனை !!
சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரான ஞானதேசிகன், சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆணந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக நீண்டகால பதவி வகித்தவர் ஞானதேசிகன். பின்னர் திடீரென தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலின் போது, திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறி அக்கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பதவியேற்பு விழா இடம் தொடர்பாகவும் விவாதித்தார் ஞானதேசிகன் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக வந்தபோது, ஞானதேசிகன் வரக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். அப்போது முதன்மை செயலராக இருந்த ராம்மோகன் ராவ்தான் ஜெயலலிதா முதல் கையெழுத்திடும் கோப்புகளை எடுத்துக் கொடுத்தார்.
பின்னர் சிறிதுகாலம் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த ஞானதேசிகன் எல்காட் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருடன் புவியியல், சுரங்கத்துறை ஆணையாளர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக விசாரணைகள் நடத்தப்படவும் இல்லையாம். இதனால் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றாக சென்று இது குறித்து முறையிட்டிருக்கின்றனர். மேலும், அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. அதிருப்தியான மன நிலையில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. இது குறித்து முதல்வரை சந்தித்து முறையிட அனுமதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடப்பதாக தகவல் பரவியது. இதனால், தலைமைச் செயலகத்தில் நேற்று இரவு வரை பரபரப்பு நீடித்தது. ஆனால் எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றதால் உளவுத்துறை அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதேநேரம், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உணவு விடுதியில், முக்கிய அதிகாரிகள் சிலர் கூடி சஸ்பெண்ட் மற்றும் பணியிடங்கள் வழங்காமல் மாதக் கணக்கில் காத்திருக்க வைத்திருப்பது குறித்து நேற்றிரவு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் நடவடிக்கை மற்றும் பணி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச கூட்டத்தில் முடிவெடுத்ததாக தெரிகிறது.