உளவுத்துறை வார்னிங்கால் அவசரம் அவசரமாக ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓபிஎஸ் அணியின் கோரிக்கை டைம் பாம் ரகம் என உளவுத்துறை வார்னிங் கொடுத்ததால்தான் தற்போது அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட வைத்திருக்கிறது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கோரும் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை விஸ்வரூபமெடுத்தால் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என உளவுத்துறை கொடுத்த வார்னிங்கை தொடர்ந்தே ஏதேனும் திடீரென தமிழக அரசு மூலம் அறிக்கையை விட்டு சமாளித்திருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து விடாது கருப்பாக சசிகலா அணியை மிரட்டிக் கொண்டிருக்கிறது ஓபிஎஸ் அணி. அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உளறிக் கொட்டியதை மக்கள் அண்ட புளுகாக மட்டுமே பார்த்தனர்; அதன் மீது எந்த ஒரு நம்பகத் தன்மையும் ஏற்பட்டுவிடவில்லை.
இந்த ஆகாச புளுகு ஓபிஎஸ் அணிக்கு ரொம்பவே சாதகமாகிவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஓபிஎஸ் அணி அறிவித்தது.
இது தொடர்பாக உளவுத்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை பத்தோடு பதினொன்றாக நினைக்காதீர்கள்.. உங்களுக்கு கடும் நெருக்கடியைத் தரும் டைம் பாம் போன்றது.. எதையாவது செய்து சமாளித்தே தீர வேண்டும். இல்லையென்றால் சிக்கல்தான் என சுட்டிக்காட்டியிருந்தது.
இதையடுத்துதான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேறுவழியில்லாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை கேட்டார். இன்று அந்த அறிக்கை வந்துவிட்டது. அதேபோல் அப்பல்லோவிடம் ஒரு அறிக்கை கேட்டார்கள். அதுவும் வந்துவிட்டது. என்னதான் அறிக்கை வெளியிட்டாலும் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது சசி அணியின் தமிழக அரசு.
இதை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வைத்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டனர். ஆனால் ஓபிஎஸ் அணி சும்மாவிடுவதாக இல்லை. ஜெயலலிதா எப்படி மயக்கமடைந்தார் என்பது தொடங்கி நடந்த அனைத்தையும் நீதி விசாரணை மூலமே மக்கள் அறிய முடியும்; இந்த அறிக்கையை ஏற்க முடியாது என அடம்பிடிக்கிறது. இதனால் இடியாப்பச் சிக்கலில் சிக்கி விழிபிதுங்கியுள்ளது சசி அணியின் தமிழக அரசு.