விஸ்பரூமெடுத்த சட்டக்கல்லூரி மாணவர்கள்- தமிழகம் முழுவதும் போராட்டம் – முடங்கிய போக்குவரத்து!!
கோவை / திருச்சி: சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தினால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து முடங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் நேற்று பாரிமுனையில் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். போலீசார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டக்கல்லூரிக்கு ஒருவாரகாலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் போராட்டம்
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இன்று காலையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ஜி.பி. சிக்னலில் குவிந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
அகற்றிய போலீசார்
உடனே அங்கு வந்த போலீசார் சட்டக் கல்லூரி மாணவர்களை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் வேனில் ஏற்றினர். சுமார் 6 வேன்களின் மாணவர்களை கைது செய்து ஏற்றி கொண்டு சென்றனர். அதில் ஒரு வேனில் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர்.
நெல்லையில் பதற்றம்
நெல்லையில் இன்று காலை சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவர்கள் மறியலை கைவிட்டனர்.
சேலத்தில் ஆர்பாட்டம்
சேலம் கோரிமேடு அருகில் உள்ள தனியார் சட்டக்கல்லூரி முன் சட்ட கல்லூரி மாணவர்கள் சிலர் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் அரசு கல்லூரி மாணவர்களில் சிலர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க கல்லூரி மெயின் கேட்டை ஆசிரியர்கள் இழுத்து பூட்டினர்.
மதுரையில் தள்ளுமுள்ளு
மதுரையிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு பேரணி செல்ல முயன்ற மாணவர்களை போலீஸ் தடுத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட நீதிமன்றம் முன் சாலையில் அமர்ந்து மாணவர்கள் தொடர்ந்து மறியல் செய்தனர்.
புதுவையில் மறியல்
புதுவை சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலையில் அமர்ந்து வாகனங்களுக்கு வழிவிடாமல் மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாணவர்கள் கைது
சாலைமறியலில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் புதுவை போலீசார் கைது செய்தனர். திருச்சி, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.