சரியில்லாத சிஸ்டத்தை வச்சுதானே சம்பாதிச்சிங்க.. ரஜினியை விளாசும் சி.வி.சண்முகம்
தமிழக சிஸ்டத்தை பயன்படுத்தித் தானே ரஜினி பணம் சம்பாதித்தார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள சிஸ்டத்தை பயன்படுத்தித்தானே கோடிக்கணக்கில் ரஜினி பணம் சம்பாதித்தார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் வீடூர் அணையில் வண்டல் மண் அள்ளும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், இந்த சிஸ்டத்தை பயன்படுத்தித் தானே ரஜினிகாந்த் தமிழகத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் என்று கேட்டார்.
கடந்தவாரம் 16ம்தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இறுதி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட நல்ல அரசியல் தலைவர்கள் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் சிஸ்டம் சரியில்லையே என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியல் சூழ்நிலையை சுட்டிக்காட்டிப் பேசியதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.