பஸ் கட்டண உயர்வால் தோல்வி பீதி.. உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தமிழக அரசு தீவிரம்
உள்ளாட்சி தேர்தலை மேலும் 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறதாம்.
Recommended Video
சென்னை: பேருந்து கட்டண உயர்வால் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 30-க்குள் நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் பல கண்டனங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி அளித்தது.
மக்கள் கொந்தளிப்பு
இந்த நிலையில் திடீரென வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் அணிவகுப்பு
மாணவர்கள், பெண்கள், அனைத்து கட்சியினரும் வீதிக்கு வந்து போராடியும் தமிழக அரசு பைசா கணக்கில்தான் கட்டணத்தைக் குறைத்தது. இப்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
ஒத்தி போட ஆலோசனை
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் உள்ளதும் போச்சு என்கிற நிலைமைதான் என்பது ஆளும் அதிமுகவின் அச்சம். இதனால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து படுமும்முரமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போராடியாவது ஒத்திவைக்க மும்முரம்
மாணவர்களின் பொதுத்தேர்வுகள் நடப்பதால் உள்ளாட்சி தேர்தலை மேலும் 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதிமன்றத்திடம் கடைசியாக அவகாசம் கேட்டுப் பார்க்கலாம் என நினைக்கிறது தமிழக அரசு. நீதிமன்றம் கடுமையே காட்டினாலும் போராடியாவது அவகாசம் வாங்கிவிடுவது என்பதற்கான வேலைகளில் அரசு தரப்பு மும்முரமாக இறங்கியுள்ளதாம்.