அரசின் நிர்வாகக் கோளாறால் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயரும் முதலீடுகள்: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தொழில்துறையை ஊக்குவிக்காதது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு செல்லத் தொடங்கி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோசமாகி வரும் முதலீட்டு சூழல்:
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்கள் எல்லாம் பிற மாநிலங்களுக்குப் படையெடுத்து செல்வதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. ஏடுகளிலும் அதுபற்றி செய்தி வந்துள்ளது.கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்கு செல்ல உள்ளன என்றும், தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் அதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது என்றும், இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்குத் தொழில்கள் இடம் பெயர வாய்ப்புள்ளது என்றும் செய்தி வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில் கடந்த 20-ந்தேதியன்று ‘‘சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு'' ஒன்று நடத்தப்பட்டுள்ளது.கர்நாடகா தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல தொழில் முனைவோரின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. அந்த மாநாட்டில், கர்நாடக முதல்வர், தொழில் துறை அமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் பங்கேற்றதோடு, தொழிலதிபர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை எல்லாம் வாரி வழங்கியுள்ளனர்.
200 தொழிலதிபர்கள் முதலீடு:
கோவையில் கர்நாடக மாநிலத்தின் சார்பில் நடைபெற்ற அந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளிலே தொழில் நடத்துகின்ற சுமார் 200 தொழிலதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாம்ராஜ் நகரில் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்கிட முன்வந்துள்ளனர்.
அரசின் நிர்வாகக் கோளாறே காரணம் :
தமிழ்நாட்டிலிருந்து, கர்நாடகாவிற்கு முதலீடுகள் போகக் காரணம், தமிழகத்திலே உள்ள மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காத அணுகுமுறை போன்றவைதான் என்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள், மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்று விட்டார்கள். இப்போது மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் வெளிமாநிலத்திற்குச் செல்லத் தொடங்கிவிட்டன.
அமைதிப்புரட்சி :
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு புதிய தொழில் கொள்கையை வகுத்து தொழில் வளர்ச்சிக்கு அளித்துவந்த ஊக்கம், தொழில் முதலீட்டாளர்களுடன் தொழில் நேயத்துடன் கொண்டுள்ள வெளிப்படையான அணுகுமுறை, உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.தொழில் கட்டமைப்புகள் முதலியவற்றின் பயனாக ஐந்தாண்டுகளில் 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்ச ரூபாய் அதிகரித்து மொத்த முதலீடு 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 லட்ச ரூபாய் என, ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து. தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது.
தொழில் பூங்கா அமைக்க...
கடந்த வாரத்தில் மத்திய அரசின் கயிறு வாரிய துணைத்தலைவராக உள்ள கா.ராயர், சென்னையிலே செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘‘மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில், மத்திய கயிறு வாரியத்தின் (காயர் போர்டு) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் கயிறு தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது. மாநில அரசு 10 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும். கதர், கிராம சர்வோதய சங்கத்தின் மூலமாக 20 கோடி ரூபாய் வழங்கினால் விழுப்புரத்தில் வழுதரெட்டி கிராமத்தில் 200 ஏக்கர் இடத்தில் இந்தத் தொழில் பூங்கா உருவாகும். ஆனால் தமிழக அரசு இதுவரை பூங்கா அமைக்க அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை மட்டையும், நாறும் தீயிட்டுக் கொளுத்தி வீணாக்கப்படுகிறது'' என்று தமிழக அரசுமீது குற்றஞ்சாட்டிய மத்திய அரசு அதிகாரியின் பேட்டி ஏடுகளில் வெளி வந்திருக்கிறது. ஒரு வாரம் ஆகிறது. இதற்கு தமிழக அரசின் பதில் என்ன?' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.