ஷார்ஜாவில் தமிழர் மரணம்: உடலை ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் மனைவி
ஷார்ஜா: ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் அவரது மனைவி தவித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தன் மணிவேல் (51). அவர் கடந்த 1998-ஆம் ஆண்டு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு தொழில்நுட்ப பணியாளர் வேலைக்கு வந்தார். ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிதாக தொழில்நுட்ப சேவை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் 5 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த பணிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில் தனது மனைவி சரஸ்வதியை அழைத்துள்ளார். அவர்களுக்கு குழந்தை கிடையாது.
இருவரும் நல்ல முறையில் இருந்து வந்தனர். அவர்கள் தொடங்கிய நிறுவனம் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கிளீனிங் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்யும் மேலும் இரண்டு நிறுவனங்களையும் மணிவேல் தொடங்கினார். நல்ல முறையில் வேலைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது காத்தன் மணிவேலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று சோதனை செய்த போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது.
நல்ல முறையில் சென்று கொண்டிருந்த நிறுவனம் திடீரென சரியான வேலை கிடைக்காமல் இருந்தது. மேலும் அந்த நிறுவனத்துக்கு பணம் தரவேண்டிய நிறுவனங்கள் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தன. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் ஷார்ஜா குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மணிவேல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவருக்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்து வருகிறார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல
வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். எனினும் சரியான வழிகாட்டுதல் அவருக்கு கிடைக்கவில்லை. தனியாக இருந்து வரும் தனக்கு உணவு உண்ண கூட கையில் பணம் கிடையாது. தமிழ் அமைப்புகளோ அல்லது நிறுவனங்களோ தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உருக்கமாக தெரிவித்தார்.
அவருக்கு பொருளாதார ரீதியாகவும், அவரது கணவரின் உடலை கொண்டு செல்ல உதவிட விரும்புவோர் 052 8199492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.