மூடி மூடி திறக்குது வானம்.. மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல்
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும், ஆங்காங்க கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
ஆந்திரா அருகில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், ஆந்திராவில் கடும் மழை பொழிவை தந்துள்ளது. அதிகபட்சமாக கலிங்கப்பட்டினத்தில், 32 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், தோவாலாவில், 13 செ.மீ., மற்றும் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றார் அவர்.
சென்னையில்
தலைநகர் சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக உள்ளது. புறநகர்கள் சிலவற்றில் லேசான தூறல் காலையில் காணப்பட்டது. இருப்பினும் இதுவரை மழை பெய்யவில்லை. லேசான வெயிலும் அடிக்கிறது. மாலையில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.