தென்மேற்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை சாத்தியம்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் பெய்த அளவை விட கொஞ்சம் குறைவான அளவிலேயே பெய்து வருகிறது. குறிப்பாக தற்போது தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.
தற்போது, தென் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "கொமரைன் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் நிலைக் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.