சசிகலாவின் திடீர் விசுவாசியாக உருவெடுத்த அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி... வெலவெலக்கும் அமைச்சர்கள்!
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மட்டுமே சந்தித்து வருகிறார். இதனால் அமைச்சர்கள் பலரும் வெலவெலத்து போயுள்ளனர்.
சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் அதிதீவிர விசுவாசியாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உருவெடுத்திருப்பதை சக அமைச்சர்கள் திகிலுடன் பார்த்து வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலாவுக்கு தொடக்கம் முதலே அவரது உதவியாளர் ரஜினி என்பவர்தான் எல்லாமுமாக பார்த்து வருகிறார்.
ரஜினி, விவேக்
சிறையில் சசிகலாவுக்கு தேவையானவற்றை ரஜினிதான் கொடுத்து வந்தார். அதேபோல் இளவரசி மகன் விவேக்கும் சசிகலாவுக்கு தேவையானதை செய்து கொடுத்து வந்தார்.
பாலகிருஷ்ணா ரெட்டி
இவைகள் வெளியே தெரிந்த அளவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் சந்திப்புகள் தெரியவரவில்லை. ஓசூரில் பாலகிருஷ்ணா ரெட்டி இருப்பதால் சில மணிநேரங்களில் சசிகலாவை சந்திக்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிடுகிறது.
தொடரும் சந்திப்பு
இந்த சந்திப்புகளை பெரும்பாலும் சிறை அதிகாரிகள் மறைத்துவிடுகின்றனர். ஆனால் சசிகலாவை தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டிதான் சந்தித்து வருகிறாராம். இவருக்கு முன்னர் அமைச்சர் கருப்பண்ணசாமிதான் சசிகலாவை சந்தித்து வந்தார்.
ஏறுமுகம்?
தற்போது பாலகிருஷ்ணா ரெட்டி தொடர்ந்து சசிகலாவை சந்தித்து வருவதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெலவெலத்து போயுள்ளனர். அதிமுகவில்தான் யாருக்கு எப்போது ஏற்றம் கிடைக்கும் என்பது தெரியாதே... அதனால் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.