ஆஹா.. இதுவல்லவா கண்டுபிடிப்பு.. ரஜினிகாந்த்தை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினி கண்டுபிடித்திருக்கிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினிகாந்த் கண்டுபிடித்து இருக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கும் ரஜினி முதன்முறையாக இந்த மேடையில் அரசியல் பேசினார். அப்போது இதுவரை தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
அப்போது, எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியைத் தம்மால் கொடுக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இவர் பேசும்போது தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்று ரஜினி குறிப்பிட்டார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ஜெயக்குமார், தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினி கண்டுபிடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆரின் பெயரை வைத்து அரசியலில் புகழ் தேட முயன்றவர்கள் எல்லாம் ஆரம்பித்த வேகத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.