காணாமல் போன 97 மீனவர்களைத் தேடி வருகிறோம் : நாகர்கோவிலில் அமைச்சர் ஜெயக்குமார்
காணாமல் போன 97 மீனவர்களைத் தேடி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படையோடு தமிழக அரசும் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்து உள்ளது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால், கடலோர மீனவ கிராமங்களில் மீனவர்களின் குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மீனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படை, மத்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பல குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்தத் தேடுதல் பணியில் கடலோரப்படை விமானங்கள், ஹெலிக்காப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இந்தத் தேடுதல் குறித்து அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது குமரி மாவட்டத்தில் காணாமல் போன 97 மீனவர்கள் தேடப்படுகின்றனர். மொத்தம் 1229 விசைப் படகில் 945 மீட்கப்பட்டு உள்ளன. 182 படகுகளும் அதில் இருந்த மீனவர்களும் இதர மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர். அவர்களைத் தமிழகம் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.
இதர மாநிலங்களில் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் 5 ஆயிரத்து 859 பாரம்பரிய படகுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 820 படகுகள் பத்திரமாக உள்ளன. கடலுக்குச் சென்ற மீதம் உள்ள 39 படகுகளைத் தேடி வந்தோம். அதில் 6 படகுகள் திரும்பி கரை வந்துள்ளது. மீதமுள்ள 33 படகுகள் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறோம். ஆயிரத்து 229 விசைப்படகுகளில் 945 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. 182 படகுகள் இதர மாநிலங்களில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்க நடவடிக்கை
182 படகுகளில் மீன் பிடிக்கச் சென்று இருந்த 2 ஆயிரத்து 124 மீனவர்கள் நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் பாதுகாப்பாக உள்ளனர். 2 ஆயிரத்து 124 மீனவர்களை மீட்டுவர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தனிக்குழு அமைத்து கணக்கெடுப்பு
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து எத்தனை மீனவர்கள் கடலுக்குச் சென்று உள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்கத் தேவையான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 44 மீனவ கிராமங்களுக்கும் ஒவ்வொரு குழு அனுப்பப்பட்டுள்ளது. அந்த குழுவினர் கிராமத்தின் பெயர், வள்ளத்தின் பெயர், இயந்திர கட்டுமரத்தின் பெயர், பதிவு எண், அதில் சென்ற மீனவர்கள் உள்ளிட்ட அனைத்தும் கணக்கெடுக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்புக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
97 மீனவர்களைத் தேடும் பணி
இதுவரை மீட்கப்பட்டவர்கள் தவிர 97 மீனவர்கள் காணாமல் போயிள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நோடல் அலுவலர்கள் மத்திய அரசை தொடர்பு கொண்டு, மாநில மீன்வளத்துறை, போலீஸ் ஆகியோரின் உதவியையும் நாடி இருக்கிறோம் அவர்களும் உதவி வருகிறார்கள். கப்பல், விமானங்கள், ஹெலிக்காப்டர்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது.
மத்திய அமைச்சர் உறுதி
தேடுதல் பணிக்காக கிராமத்தூரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சரும் உறுதி அளித்திருக்கிறார். கிழக்கில் 4 கப்பல்கள், மேற்கில் 4 கப்பல்கள் மற்றும் ராஜாளி விமானப்படைத்தளத்தில் இருந்து விமானம் வரவழைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.