தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருடன் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் கலந்து கொண்டார்.
இதுகுறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவர் எழுந்திருக்க வேண்டும். ஏன் எழுந்திருக்கவில்லை என அவர் தான் விளக்க வேண்டும் என்றும், இதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே விஜயேந்திரர் செய்தது தவறு தான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், விஜயேந்திரர் செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூவும் இருவேறு விதமான கருத்துகளை கூறி இருக்கும் நிலையில் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.