நொய்யல் ஆற்றில் வருவது வெறும் சோப்பு நுரைங்க... அமைச்சர் கருப்பண்ணனின் அடடே விளக்கம்
நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலந்துள்ளதோடு மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் கலந்ததாலேயே நுரை கிளம்பியதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலந்திருக்கும் நிலையில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் கலந்ததாலேயே நுரை பொங்கியதாக சுற்றுச்சூழ்ல் துறை அமைச்சர் கருப்பண்ணன் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
திருப்பூரில் கடந்த வாரம் பெய்த கனமழையின் போது நொய்யல் ஆற்று நீர் நுரைத்தபடி ஓடியது. இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமடைந்தனர்.
சாய சலவைப்பட்டறைகள் சில முறைகேடாக சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிட்டதாகவும், இதனால் நொய்யல் கரையோர மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
திருப்பூரில் அமைச்சர்கள்
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட சாய சலவைப்பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
சாய ஆலைகள் மீது தவறில்லை
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் சாய ஆலைகளால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதைப் பார்த்தால் யாரோ தேவையற்ற நபர்கள் சாய ஆலை உரிமையாளர்கள் மீது களங்கம் உண்டாக்க நினைத்திருப்பதுபோல் தெரிகிறது. எனவே, சாயப்பட்டறை உரிமையாளர்கள் யாரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்றும் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் குளிக்கும் சோப்பு நீரால் நுரை
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், நொய்யல் ஆற்றில் கடந்த வாரம் ஆற்று நீருடன் நுரையுடன் சென்றதற்கு சாய சலவைப்பட்டறை நீர் காரணமல்ல. நொய்யல் ஆற்றில் சாக்கடை நீர்கலக்கிறது. வீடுகளில் நாம் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் இதில் கலக்கிறது, இதன் காரணமாகவே நுரை ஏற்பட்டுள்ளது.
ஆலைகள் கவலை வேண்டாம்
சோப்பு நுரை என்பதால் தான் இரண்டு நாட்களில் நுரை மறைந்து விட்டது. நொய்யலில் நுரை பொங்கியதைப் பற்றி சாய ஆலை உரிமையாளர்கள் கவலைப்பட வேண்டாம். தைரியமாக தொழில் செய்யுங்கள். உங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரும்.
உப்பு சத்து குறைவு
கடந்த 2010ம் ஆண்டில் நொய்யல் ஆற்றில் 7000 டிடிஎஸ் உப்பு இருந்தது. தற்போது ஆற்றில் 1200 டிடிஎஸ், குளத்தில் 700 டிடிஎஸ் உப்பு தான் உள்ளது. மேலும், கடந்த காலத்தில் ஒருவர் செய்த தவறினால், தற்போது 21 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் போன்ற தொழில் நகரம் வளர அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்றார்.
அமைச்சரின் அடடே விளக்கம்
இதனிடையே சோப்பு நீர் கலந்ததால் நொய்யல் ஆற்றில் நுரை கிளம்பியதாக அமைச்சர் கருப்பண்ணன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுகிறது. வைகை ஆற்று நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் போட்டு மூடும் திட்டத்தை விட நொய்யல் ஆற்றில் கிளம்பும் நுரைக்கு அமைச்சரின் இரண்டாவது பெரிய கண்டுபிடிப்பு என்று கேலி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து
நொய்யல் ஆற்று நீர் சோப்பு நீர் கலந்ததால் தான் நுரைத்ததாக கூறும் இதே அமைச்சர் கருப்பண்ணன் தான் விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயிகள் நிதிநிறுவனம் நடத்துகின்றனர், வங்கிகளில் பணம் முதலீடு செய்துள்ளனர். கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு பல தொழில்களை செய்து வருவதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.