வளர்மதிக்கு ரூ. 8.92 கோடி, எடப்பாடி பழனிச்சாமிக்கு ரூ. 3.84 கோடி
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அமைச்சர்களாக இருந்து மக்களுக்கு சேவை செய்தவர்களின் சொத்து மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது அவர்கள் வேட்புமனு உடன் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என 233 பேரும் நேற்று, ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் வேட்பு மனுவுடன், சொத்து விவரங்களை தெரிவித்திருந்தனர்.
இந்த முறை போட்டியிட, 20 அமைச்சர்களுக்கு, சீட் கிடைத்துள்ளது. அதில், சில அமைச்சர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டபோது, ஐந்து ஆண்டுகளில், அவர்களின் சொத்து மதிப்பு அபார வளர்ச்சி பெற்றிருப்பது, தெரிய வந்தது.
அமைச்சர் வளர்மதி
அமைச்சர் வளர்மதி கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரது பெயரில், 92.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்; அவரது கணவர் பெயரில், 2.43 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையாசொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சொத்து மதிப்பு
இந்த தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அவரது பெயரில், 54.09 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து; 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, அவரது கணவர் பெயரில், 47.94 லட்சம் ரூபாய் மதிப்பு அசையும் சொத்து, 6.76 கோடி ரூபாய் அசையா சொத்து என மொத்தம், 8.92 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரூ. 5.56 கோடி அதிகரிப்பு
வளர்மதியிடம், 1,016 கிராம் தங்க நகைகள்; அவரது கணவரிடம், 44 கிராம் தங்க நகைகள், வளர்மதி பெயரில், ஸ்கார்பியோ கார், அவரது கணவர் பெயரில், இனோவா கார் உள்ளதாக, மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அவரது சொத்து மதிப்பு, 5.56 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
கோகுல இந்திரா
அண்ணாநகர் தொகுதி வேட்பாளருமான எஸ்.கோகுல இந்திரா தனது ஆண்டு வருமானம் (2014-2015) ரூ. 4.8 லட்சம் எனவும், தனது கணவர் சந்திரசேகரின் ஆண்டு வருமானம் ரூ.72.92 லட்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கையிருப்பு ரொக்கமாக தன்னிடம் ரூ.1.90 லட்சமும், கணவரின் பெயரில் ரூ.2.11 லட்சமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் வைப்பீட்டுத் தொகையாக தனது பெயரில் ரூ.26.43 லட்சமும், கணவர் பெயரில் ரூ.1.20 கோடியும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அசையும், அசையா சொத்துகள்
தனது பெயரில் ரூ.89.54 லட்சம் மதிப்புள்ள 9 வாகனங்களும், கணவர் பெயரில் லாரி, டிப்பர் லாரி உள்பட 1.14 கோடி மதிப்பிலான 16 வாகனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக தனக்கு கையிருப்பு, வைப்பீடு உள்பட அசையும் சொத்தாக ரூ.1.20 கோடியும், கணவர் பெயரில் அசையும் சொத்தாக ரூ.2.69 கோடியும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சருக்கு கடன் எவ்வளவு?
மகள்கள் பூர்ணிமா ஆகியோர் பெயரில் முறையே ரூ.18.24, ரூ.17.58 லட்சம் அசையும் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் பெயரில் ரூ.4.68 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடன்களாக தனக்கு ரூ.8.46 லட்சமும், தனது கணவருக்கு ரூ.2.61 கோடியும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2011 சட்டசபை தேர்தலின்போது, தனது குடும்பத்தினர் பெயரில், 47.49 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 3.19 கோடி ரூபாய் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ரூ.4.13 கோடி அதிகரிப்பு
இம்முறை தன் பெயரில், 2.10 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 2.97 கோடி, மகன் பெயரில், 89.46 லட்சம், தாயார் பெயரில், 2.50 லட்சம், மருமகள் பெயரில், 1.81 கோடி ரூபாய் என மொத்தம், 7.80 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகதெரிவித்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளில், இவரது குடும்பத்தினர் சொத்து மதிப்பு, 4.13 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
அமைச்சர் சம்பத்
அமைச்சர் சம்பத் இம்முறையும் கடலுார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது பெயரில் சொந்த வீடு இல்லை. இனோவா கார், 96 கிராம் தங்கம், கையிருப்பு, 60 ஆயிரம் ரூபாய் உள்ளது. வங்கியில், 12.15 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
அசையா சொத்து
மனைவி தமிழ்வாணி பெயரில், கையிருப்பு, 55 ஆயிரம் ரூபாய்; வங்கியில், 1 லட்சம் ரூபாய்; டிராக்டர், இன்னோவா கார், 960 கிராம் தங்க நகை, 10 கிலோ வெள்ளி நகை உள்ளது. அசையா சொத்து, 2.79 கோடி ரூபாய்க்கு உள்ளது.
மகன் பெயரில் சொத்து
மகன் பிரவீன் பெயரில், கையிருப்பு, 30 ஆயிரம் ரூபாய், வங்கியில், 4.62 லட்சம் ரூபாய், 80 கிராம் தங்க நகை உள்ளது. குடும்பத்தினர் பெயரில், மொத்தம், 3.84 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.
இருமடங்கான சொத்து
கடந்த, 2011 தேர்தலில், 1.32 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். ஐந்து ஆண்டுகளில் சொத்து மதிப்பு, 2.52 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ் இரண்டாவது முறையாக, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 2011 தேர்தலின்போது, தன் பெயரில், 31.41 லட்சம் ரூபாய்; மனைவி பெயரில், 40.20 லட்சம் ரூபாய் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதிகரித்த சொத்து
அமைச்சர் காமராஜ் இம்முறை தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் தன் பெயரில், 55.59 லட்சம் ரூபாய் அசையும் சொத்து; 55.65 லட்சம் ரூபாய் அசையா சொத்து; மனைவி பெயரில், 29.83 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 55 லட்சம் ரூபாய் அசையா சொத்து என, மொத்தம், 1.96 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், இவரது சொத்து மதிப்பு, 1.24 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.