மக்கள் முன்னிலையில் சொந்த கட்சி எம்.பியை போட்டுத் தாக்கிய தமிழக அமைச்சர்!
ராமநாதபுரம்: மக்கள் முன்னிலையில் தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன், அதிமுக எம்.பியான அன்வர்ராஜாவை தாக்கியதாக நக்கீரன் வாரம் இருமுறை ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் உத்திரகோசமங்கையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் முனியசாமியுடன் அமைச்சர் சுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.பியான தம்மை அழைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார் அன்வர்ராஜா.
இது தொடர்பாக விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சுந்தரராஜனுக்கும் எம்.பி. அன்வர்ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
அப்போது இருவருக்கும் இடையே நடந்த விவாதம்:
அன்வர்ராஜா: "என்ன லூசு-ன்ற..?''
அமைச்சர்: "மரியாதையாப் பேசு.''
அன்வர்ராஜா: "என்ன உனக்கு மரியாதை..? நீ மட்டும் தான் கட்சியில் இருக்கியா..? உன் வீட்டு பங்ஷனுக்கு என்னைக் கூப்பிடச் சொல்லலை. அரசாங்க பங்ஷனுக்குத் தான் கூப்பிடச் சொன்னேன். உன் வீட் டில் செடியை நட்டால் கேக் கப் போறேனா? கலெக்டரைக் கேட்டால் தெரியாதுங்கிறான். என்ன நினைச்சுக்கிட்டு இருக்க. நாளைக்கு லோக்கல்ல, எம்.பி. என்ன ஆனான்னு பப்ளிக் கேட்பான்ல.''
அமைச்சர்: "நீ இதுக்கு மேல பேசினே... மரியாதை இல்லாம போயிரும்.''
அன்வர்ராஜா: "உனக்கு என்னடா மரியாதை..!''
அமைச்சர்: "போடா டேய்... வந்துட்டான் பஞ்சாயம் பேச...'' (என சொல்லிக்கொண்டே இன்னோவா காரில் ஏறி முன் சீட்டில் உட்கார)
அன்வர்ராஜா: "நில்லுடா...! பதிலைச் சொல்லிட்டுப் போடா...! பயந்துகிட்டுப் போற...'' (எனக் கூறிக்கொண்டே காரின் முன்பக்க கதவைப் பிடித்துக்கொள்ள)
அமைச்சர்: "விடுடா காரை..!''
அன்வர்ராஜா: "சொல்லுடா...''
அமைச்சர்: "என்ன சொல்லிட்டே இருக்கேன். ரவுசு பண் றியா...'' எனக் கூறிக்கொண்டு காரின் உள்ளிருந்து கதவை திறக்க...
காரின் கதவைப் பிடித்திருந்த அன்வர்ராஜா நிலை தடு மாறி கீழே விழ -அருகிலிருந்த போகளூர் நாகநாதன் என்பவர் தாங்கிப் பிடித்துள்ளார். எழுந்த அன்வர்ராஜா அமைச்சரை நோக்கி அடிக்க பாய்ந்த போது. மறுபடியும் தள்ளி விட்டார் அமைச்சர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி அன்வர்ராஜா எம்.பி. கூறியதாவது:
அன்று சனிக்கிழமை 9 மணி முதல் 10.30 வரை ராகுகாலம் என்பதால், தலைமை யிலிருந்து 11 மணிக்கு நிவாரண நிதி கொடுத்தால் போதும் என சொல்லிட்டாங்க. இவரு என்னவோ உடனே குடுக்கணும்னு துள்ளிக் கிட்டிருந்தார்.
அதனால 10.30 மணிக்குத் தான் சர்க்யூட் அவுசுக்கு வந்தேன். சார் நானும் மக்கள் பிரதிநிதி. என்னை அரசு விழாவுக்கு கூப் பிடாமல் புறக்கணிக்கிறது எந்த வகையில் நியாயம்? என்னைப் புறக்கணிக்கிறது அ.தி.மு.க.வைப் புறக்கணிக்கிறதும் ஒண்ணுன்னு என்னைக் கூப்பிடலைங்கிற வருத்தத்தில் அதிகாரிகளிடம் பேசிக்கிட்டிருந்தேன்.
இவரைச் சொல்லுறதா நினைச்சுக்கிட்டு, "என்னடா லூசு மாதிரி பேசுற...'ன்னு அடிக்கிறதுக்குப் பாய்ந்தார்; தள்ளி விட் டார். பதிலுக்கு நானும் பேசி னேன். ஆனால் அடிக்கலை. ஒரு அமைச்சர் இப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கல்லை.
இது குறித்து தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன் கூறியதாவது:
அரசுவிழாவுக்கு அவருக்குத் தகவல் சொல்லவில்லை என்றால் அது அதிகாரிகள் தவறு. என்னிடம் வந்து சண்டை போடக் கூடாது. அவருதான் ஒருமையில் பேசி என்னைத் திட்ட ஆரம் பிச்சார். அவரு அடிக்கப் பாய்ந்தார்.
மற்றவங்க தடுத்ததால நான் விலகி வந்துட்டேன். அவரை வேண்டுமென்றே தள்ளி விடல. இது பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சி அரசியல்.
இவ்வாறு நக்கீரன் ஏடு பதிவு செய்துள்ளது.