யார் என்ன சொன்னாலும் சரி.. தெர்மகோல்தான் பெஸ்ட்.. விடாப்பிடி செல்லூர் ராஜூ
விமர்சனங்கள் பல எழுந்தாலும் வைகை நீர் ஆவியாதலை தெர்மகோல் மூலம் கட்டாயம் தடுத்தே தீருவோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை : நீர் வறட்சியை கட்டுப்படுத்த வைகை அணையில் தெர்மகோல் போட்டு நீராவியாதல் தடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தெர்மகோல் கொண்டு நீர் ஆவியாதலை தடுக்க "அணை" கட்டிய விவகாரத்தில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ உலகளவில் பேமஸ் ஆகிவிட்டார். சமூக வளைதளங்களில் அவரை கலாய்த்துதள்ளுகிறார்கள்.
மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு தற்காலிக தலைவராகிவிட்டார் அமைச்சர். அரசியல்தலைவர்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அவர் சளித்துக்கொண்டதாக தெரியவில்லை. அடுத்தடுத்து, தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், விவாதத்தில் பங்கேற்றவர்களின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தவறவில்லை.
சீனாவில் சொன்னாங்க..
"எனக்கு சீனாவிலிருந்து நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார். தெர்மகோல்தான் பெஸ்ட் திட்டம். தற்போது பரிச்சார்த்த முறையில் சோதித்திருக்கிறோம். கட்டாயம் இந்த திட்டத்தை அமல்படுத்துவோம்" என்று உறுதியாக சொன்னார்.
அசராத அமைச்சர்... என்ன சொன்னாலும் சரி...
விவாதத்தில் பங்கேற்றவர்கள் அமைச்சரை லேசில் விடவில்லை. "கூவத்தூரில் முகாமில் இருந்தபோதும், தொப்பியுடன் ஆர்.கே நகரில் வலம்வந்தபோதும் மாநிலத்தில் நிலவும் வறட்சி பற்றி கவலைப்படாமல் இப்போது திடீரென எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், பள்ளிகுழந்தைகளைப்போல் தெர்மகோல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்?"என கேள்வி கணைகளால் தாக்கினர். ஆனால், அமைச்சர் அசரவில்லை. மாநிலத்தில் 140 வருடங்களுப்பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால், புதிய திட்டங்களை அமல்படுத்த மாநில அரசு முயற்சி செய்யும்போது ஏன் விமர்சிக்கிறீர்கள் என போட்டுத்தாக்கினார் அமைச்சர். அமைச்சர் சளைக்காமல் தொடர்ந்து கேள்விகளை சமாளித்தை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களே எதிர்பார்க்கவில்லை.
அமைச்சரின் புதிய ஐடியா..
தெர்மகோல் திட்டம் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறதே என்று செல்லூர் ராஜூ கவலைப்படாமல், அடுத்த புதிய ஐடியா குறித்து விவாதிக்கவும் தவறவில்லை. சிறிய கருப்பு பந்துகளைக்கொண்டு நீர் நிலைகளை மூடுவதால், நீர் ஆவியாதலைத்தடுக்கமுடியும் என்று அமைச்சர் சொன்னவுடனேயே கருப்பு பந்து திட்டத்தையும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பழியை போட்ட அமைச்சர்
எல்லாம் பேசறீங்கள்.. இதை நாங்க தன்னிச்சையாக செய்யவில்லை, மத்திய நீர்வள ஆணையத்தின் அறிவுரைப்படியே செய்கிறோம் என்று பிரச்னையை மத்திய-மாநில விவகாரமாக மாற்றிவிட்டு.. விவாதத்திற்கு நன்றி என கும்பிடு போட்டுவிட்டு நிகழ்ச்சியை முடித்தார்.