அமைச்சர் வராம எப்படி நிவாரணப் பொருள் தரலாம்? வெள்ளத்தில் வீசி வளர்மதியின் அடியாட்கள் வெறியாட்டம்!!
சென்னை: பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை பறித்து வெள்ளத்தில் வீசி அமைச்சர் வளர்மதியின் அடியாட்கள் வெறியாட்டம் போட்டதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெருமழை வெள்ளத்தால் சென்னை உருக்குலைந்து போய் கிடக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, வாழ்வாதாரங்களைத் தொலைத்து நடுத்தெருவில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரே நாளில் அதுவும் சில மணிநேரத்தில் வெள்ளம் கொடுத்த பேரிடியில் இருந்து மீளவே முடியாத பெருந்துயரத்துக்குள் லட்சக்கணக்கான சென்னைவாசிகள் தள்ளப்பட்டுவிட்டனர். இயற்கையின் இந்த பெருந்துயரைக் கண்டு அதிர்ந்து போன பல்லாயிரம் பேர் சொந்த ஊருக்கே திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு மிக மெத்தனமாக வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த அரசை எதிர்பார்க்காமல் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் மனிதாபிமானத்தோடு நிவாரண உதவி பொருட்கள் வந்து குவிகின்றன.
சமூக வலைதளங்களில் மனிதாபிமானம் கொண்டோர் இத்தகைய பேருதவியை செய்யாமல் போயிருந்தால் சென்னையில் குவியல் குவியலாக மனிதர்கள் செத்து மடிந்து போய் கூவம் ஆற்றிலும் அடையாறு ஆற்றிலும் நீருக்கு பதில் சடலங்கள்தான் பெருக்கெடுத்தோடியிருக்கும். இந்த நிலையில் இத்தகைய வெள்ள நிவாரணப் பொருட்களைக் கபளீகரம் செய்து கொண்டு ஆங்காங்கே ஆளு அ.தி.மு.க.வினர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யார் யாரோ கொண்டுவருகிறர் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டியாக வேண்டும் என்று மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் வளர்மதிதான் விநியோகிக்க வேண்டும் என்று தன்னார்வலர்களை மிரட்டியிருக்கின்றனர் அவரது கைத்தடிகள்.
சரி என பொறுமையுடன் காத்திருந்த தன்னார்வலர்களுக்கு அமைச்சர் வராதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் பல மணிநேரம்வீணாகிப் போனதுதான் மிச்சம். இதனால் வந்தது வரட்டும் என களத்தில் இறங்கி அவர்களே நிவாரணப் பொருட்களை மக்களிடத்தில் ஒப்படைத்தனர். இதில் ஆட்டம் கண்ட அமைச்சர் வளர்மதியின் அடியாட்கள், நிவாரணப் பொருட்களை பிடுங்கி வெள்ளத்தில் வீசி, தரையில் கொட்டி வெறியாட்டம் போட்டிருக்கின்றனர்.
அமைச்சரின் பெயரால் அரங்கேற்றப்பட்ட இந்த அட்டூழிய அராஜகம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சர் வளர்மதி தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்து இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கின்றனர்.