மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்: அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மரியாதை
சென்னை: மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அமைச்சர்கள் வளர்மதி, ரமணன், கோகுல இந்திரா, சின்னையா, சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மகாகவிக்கு மரியாதை செலுத்தினர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், அவரது திரு உருவச் சிலைக்கு, பாரதிய ஜனதா தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பார்த்தசாரதி கோவில் வளாகம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலையை, அப்பகுதி மக்கள், பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பாரதியாரின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுவர்கள் பாரதியார் வேடமணிந்து பங்கேற்றனர்.
பாரதி மணிமண்டபத்தில் தொடங்கி பாரதிக்கு "பாரதி" என்று பட்டம் வழங்கப்பட்ட எட்டையாபுர அரண்மனை, பாரதியார் பிறந்த இல்லம் என எட்டையாபுரம் முழுவதும் மகாகவியின் எழுச்சி மிகு பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
மேலும் பாரதியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மகாகவியின் சித்தாந்தங்களை கடைபிடிக்கவும் தரணியெங்கும் பறைசாற்றவும் தேசபக்தியோடு செயல்படவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவில்பட்டி ஆர்.டி.ஓ உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் பின் தொடர்ந்து உச்சரித்து உறுதியேற்றனர்.
சிறுசிறு பாரதியார்களின் அணிவகுப்பில் எட்டையாபுரம் கோலாகலமாகத் திகழ்ந்தது. தொடர்ந்து எட்டையாபுரத்தில் பாரதியின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.