அதிமுகவில் குடுமிபிடி சண்டை! கேபி முனுசாமி மீது அமைச்சர்கள் ஓஎஸ் மணியன், சிவி சண்முகம் பாய்ச்சல்!!
திவாகரனை விமர்சித்து அதிமுகவை காட்டி கொடுத்துவிட்டார் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி என அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் ஓ.எஸ். மணியன் சாடியுள்ளனர்.
சென்னை: எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுகவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் ஓஎஸ் மணியன் பதில் அளித்துள்ளனர்.
சசிகலாவை முதல்வராக்குவதில் மன்னார்குடி குடும்பம் தீவிரமாக உள்ளது. அப்படி சசிகலா முதல்வராகும் போது கேபினட்டில் 2-வது இடத்துக்கு ஓ.எஸ். மணியனை திவாகரன் முன்னிறுத்தி வருகிறார். இதுபற்றி நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தியும் வெளியிட்டிருந்தோம்.
தற்போது திவாகரனுக்கு எதிராக அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு பதிலடி கொடுத்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:
கண்டனத்துக்குரியது
எம்.ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன். அவர் கருத்து சொல்ல உரிமை இல்லை என கே.பி முனுசாமி கூறியது கண்டிக்கதக்கது.
பக்கபலமாக இருந்தவர்கள்...
அதிமுக வளர வேண்டும் நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கருத்து சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தது திவாகரனும் அவரை சார்ந்தவர்கள் தான்.
விலைபோய்விட்டார் முனுசாமி
மருத்துவமனையில் ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா குடும்பத்தினர் உதவி உள்ளனர். திவாகரன் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. கே.பி.முனுசாமி விலை போய்விட்டார்.
யாரோ இயக்குகிறார்கள்...
அவர் பின்னால் இருந்து யாரோ செயல்படுகிறார்கள். அவர் மனதில் வேறு எண்ணம் கொண்டு இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது. அவரை யாரோ இயக்குகிறார்கள். அ.தி.மு.கவில் அவர் இருந்து இருந்தால் இவ்வாறு அவர் கூறி இருக்கமாட்டார். யார் பொதுச்செயலாளரோ அவரே முதல் அமைச்சர் என எம்ஜிஆர் கூறி இருக்கிறார். இவ்வாறு ஓஎஸ் மணியன் கூறினார்.
துரோகியான முனுசாமி- சிவி சண்முகம்
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகமும், ஆதாயத்துக்காக கட்சியை காட்டி கொடுத்த துரோகியாகிவிட்டார் கேபிமுனுசாமி. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களையே குற்றம்சாட்டுகிறார் கேபிமுனுசாமி என சாடியுள்ளார்.