சோதனைமேல் சோதனை… சிக்கலில் தமிழக அமைச்சர்கள்… உருளப் போகும் முதல் 'தலை' எது?
வருமான வரி சோதனை, வழக்குகள் என அடுத்தடுத்து நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளதால் எப்போது பதவி பறிபோகும் என்ற பீதியில் உள்ளனர் தமிழக அமைச்சர்கள்.
சென்னை : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் தொடங்கி அமைச்சர் காமராஜ் மீது வழக்கு என அடுத்தடுத்து சறுக்கும் நடவடிக்கையால் தமிழக அமைச்சரவை ஆட்டம் கண்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதெல்லாம் ஒவ்வொரு அமாவாசையின் போது எந்த அமைச்சரவை பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் இருப்பார்கள் அமைச்சர்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, திடீரென பதவியிலிருந்து அமைச்சர் விடுவிப்பு என்ற அறிவிப்பு ஆளும் கட்சி சார்பு டிவியில் பிளாஷ் ஆகும்.
சில அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருக்கும்போதே விடுவிப்பு அறிவிப்பு வெளியான கதையும் உண்டு. ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. எப்போது ரெய்டுவரும், வழக்கு வரும் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
தினகரன் கூட்டாளி விஜயபாஸ்கர்
தமிழக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஜாலியாக சைக்கிள் ஓட்டும் போட்டோ வெளியானது. அப்போது முதலே அவர் சசிகலா அணிக்கு மிகவும் நெருக்கமானவர் என பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் அவர்களது கூட்டணியை நிரூபித்தது.
சிக்கிய விஜயபாஸ்கர்
சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துவரும் நெருக்கடிகளைக் கண்டு மற்ற அமைச்சர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும். ரெய்டு, சம்மன், குடும்பத்தாருக்கு சம்மன் என தொடர்ச்சியான நெருக்கடியில் இருக்கும் விஜயபாஸ்கர், நெருக்கடிகளால் திணறிப் போயுள்ளாராம்.
இப்போது காமராஜர்
உச்சநீதிமன்றம் இரண்டு முறை கடுமையாக கண்டனம் தெரிவித்த பிறகு மோசடி வழக்கில் அமைச்சர் காமராஜரின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக்கேட்டால், அமைச்சரை கைது செய்யும் நிலை உருவாகிவிடுமோ என கட்சியினர் அஞ்சுகின்றனர். நிலைமை கையை மீறிப்போவதை பார்க்கிறோம் ஆனால் முன்பு போல் உதவ யாருமில்லை என டெல்லியில் இருக்கும் கட்சி முக்கியஸ்தர்கள் பதறுகிறார்கள்.
பழைய வழக்கில் புதிய நடவடிக்கை?
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்திய போது அதிகரிகளை தாக்கிய வழக்கில் அமைச்சர் காமராஜ், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சென்னை போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று நீதிமன்றத்தை நாட வருமானவரித்துறை அதிகாரிகள் யோசித்துவருகிறார்களாம். ஒருவேளை அது நடந்தால், மூன்று பேரும் சிறைக்குப்போவதற்கு அதிகவாய்ப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அச்சத்தில் கொங்கு மந்திரிகள்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர்தான் அடுத்த டார்கெட் என்கிறது உளவுத்துறையின் கணிப்பு. இன்னும் சில வாரங்களில் இவர்களின் வீட்டுக் கதவை ஐடி அதிகாரிகள் தட்டுவார்கள் என்று அறிக்கை அனுப்பியுள்ளனர் அதிகாரிகள். சோதனைகளுக்கு முன்பாக வெள்ளைக்கொடியை ஆட்டி, சமாதான தூதுக்கு முயற்சி நடப்பதாகவும் கட்சியினர் சொல்கின்றனர். இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக பணநகர்வுகள், செல்போன் பேச்சுக்களை இந்த அமைச்சர்கள் குறைத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்த கட்சி இப்ப இப்படி மாறிவிட்டதே என கட்சியினர் வெளிப்படையாக அமைச்சர்கள் புலம்புவதை பார்க்கமுடிகிறது.