சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை? எடப்பாடி கோஷ்டி 'ஷாக்'
மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை: மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சேகர் ரெட்டி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துச் செய்வதில் முன்னணியில் இருந்து வருவதாகவும், அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலருக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை 2 நாள்களாக சோதனை நடத்தியது.
ஐடி சோதனை
இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.138 கோடியே 52 லட்சம் ரொக்கமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கின.
மூட்டை, மூட்டையாக பணம்
மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. மேலும் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டைரியில் தமிழக அமைச்சர்கள்
தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.300 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குறிப்பு இருந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கைக்கு ஐடி பரிந்துரை
எனவே லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் ஐடி அதிகாரிகள் பரிந்துரை கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் எடப்பாடி அரசுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.