சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டியுள்ளதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி அதிகாரிகளோடு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் வேலுமணி, 'மாநகராட்சி சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 1500 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. 75% அதிகமான பணிகள் நிறைவடைந்துவிட்டன' என்றார்.
மேலும், மழை பாதிப்புகளைக் கண்காணிக்க 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 75 பணியாளர்களோடு 24 மணிநேரமும் இயங்கும் கண்காணிப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, காவல் மற்றும் தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய ஐந்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
'அமெரிக்கா, லண்டன், பெங்களூரு ஆகிய நகரங்களை விட சிறப்பான மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வேண்டுமென்றால் நேரடியாக அழைத்துச் சென்று காட்ட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை வேண்டுமென்றே குறை சொல்கிறார்' என்றார்.