விடாது கருப்பாய் ஜெ.வை துரத்தும் வழக்கு… கண்ணகியை கும்பிடும் அதிமுக அமைச்சர்கள்
சென்னை: கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க. அமைச்சர்கள், கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து பயபக்தியோடு கும்பிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக சார்பில் கண்ணகி சிலைக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
மே 3ஆம் தேதி சித்திரை முழுநிலவு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, டி.கே.எம். சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, பி.வி.ரமணா, அப்துல் ரஹீம், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக சென்று தீச்சட்டி ஏந்துவது, கோ - தானம் செய்வது, பால் குடம் எடுப்பது, அன்னதானம் செய்வது, யாகம் வளர்ப்பது என, ஆன்மிகப் பணிகளில் தீவிரம் காட்டி பரிகாரங்களை செய்தனர்.
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜாமின் மனு மறுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, ஜெ.,வுக்கு ஜாமின் கிடைத்தது. இருந்தாலும், அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். காரணம், வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுபடாததுதான். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வராததால், கட்சியினர் பதற்றம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் தான், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கேரள எல்லையில் மலைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி நாளில் ஏராளமான அதிமுகவினர் வழிபட்டதாக கூறப்படுகிறது.
கண்ணகியின் ஆக்ரோஷம்
மதுரையை அழித்த கண்ணகி ஆக்ரோஷத்துடன் சென்றாள் அப்படி சென்றவள் ஒரு மலைப்பாங்கான இடத்தில் நின்று கொண்டிருக்கும்போது வானில் இருந்து கோவலன் வந்து ஒரு ரதத்தில் கண்ணகியை ஏற்றிக்கொண்டு வானுலகம் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில ஆதிவாசிகள் இளங்கோவடிகளிடம் கூறி அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மங்கல தேவி கண்ணகி கோவில்
அந்த இடமே பின்னாளில் கண்ணகி கோவிலாக மாறிப்போனது சுமார் 2000ம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழக கேரள எல்லையில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. இந்தகோவிலில் ஆரம்பத்தில் 3 நாட்கள் கொண்டாடி வந்த இந்த சித்ரா பவுர்ணமி விழா இப்போது கேரளா அரசின் எல்லைப்பிரச்சினை கெடுபிடிகளால் 1 நாளாக குறைந்துவிட்டது.
கூட்டம் கூட்டமாக வழிபாடு
இதனிடையே இந்த ஆண்டு மங்கல தேவி கண்ணகி கோவிலில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் ஏராளமானோர் வழிபாடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கற்புக்கரசி கண்ணகியை வழிபட்டனர்.
அமைச்சர்கள் வழிபாடு
சமீபகாலமாக, கண்ணகியை தெய்வமாக வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்க, ஜோதிடர்களும் கண்ணகி தெய்வத்தை வைத்து பரிகாரமும் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.
இப்படித்தான், சமீபத்தில் ஜெயலலிதா குறித்து ஜோதிட ஆலோசனை கேட்டபோது, சிலர், 'கண்ணகியின் கோபத்தை குறைக்க வேண்டும்; அதற்கு பரிகாரமாக, கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர். எனவேதான் அதிமுக அமைச்சர்கள் கண்ணகி சிலைக்கு சித்ரா பவுர்ணமி நாளில் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். கண்ணகி கோவிலுக்கும் அதிமுகவினர் கட்சி கரைவேட்டி அணியாமல் மக்களோடு மக்களாக சென்று வழிபாடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.