6 பேரை நீக்க சொன்ன தினகரன்... போலீஸை வைத்து வேட்டையாடனுமா? எச்சரித்த அமைச்சர்கள்
அதிமுகவில் இருந்து 6 முக்கிய பிரமுகர்களை நீக்க வேண்டும் என தினகரன் பேசியிருப்பது அமைச்சர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுக அரசு கவிழும் என தொடர்ந்து தினகரன் பேசி வருவதால் அமைச்சர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா பாணியில் வேட்டையாடினால்தான் சரிவரும் எனவும் குமுறி வருகிறார்களாம்.
தஞ்சையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தினகரன், கதிராமங்கலத்தில் பேசும்போது, ' இப்போது ஆட்சியில் உள்ள ஆறு பேரைத் தவிர யார் வந்தாலும் எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வோம். தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவோம்' எனப் பேசினார்.
யார் யார் அந்த 6 பேர்?
தினகரன் குறிப்பிடும் அந்த 6 பேர் யார் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள இருவரைப் பற்றியும் கொங்கு மண்டலம், வேலூர், தென் மாவட்டத்தில் உள்ள சிலரையும்தான் தினகரன் குறிப்பிடுகிறார்.
தினகரனை அடிக்க பாய்ந்த அமைச்சர்
முன்பு ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்வதற்கு முன்னால், 'அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு தினகரனை சந்தித்தனர் அமைச்சர்கள். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் தினகரனை அடிப்பதற்குப் பாய்ந்தார் அமைச்சர் ஒருவர். அந்த வன்மத்தை இன்னும் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன்.
தினகரன் பேச்சால் எடப்பாடி அதிருப்தி
எனவேதான், 'ஆறு பேரை நீக்க வேண்டும்' எனப் பேசுகிறார். அவர் இவ்வாறு சொல்வதை எரிச்சலோடு கவனித்து வருகிறார் முதல்வர்.
ஜெ. பாணி வேட்டை வேணுமோ
ஆயிரம் தினகரன் வந்தாலும் அசைக்க முடியாது' எனக் கூறிய பிறகும் 'ஆட்சிக்கு சிக்கல்' எனப் பேசிக் கொண்டிருப்பதை அவர் ரசிக்கவில்லையாம். தினகரன் பேச்சால் கொதித்த அமைச்சர் ஒருவர், ' நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' எனக் காட்டமாக விமர்சித்தார். நடராஜன் குடும்பத்தை ஜெயலலிதா போலீஸ் துணையோடு விரட்டியதைப் போன்ற நடவடிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம். அப்போதுதான் சசிகலா குடும்பம் அமைதியாகும்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.