நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க தமிழக பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் தேவை?
நிதிப்பற்றாக்குறையை சமாளித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கேற்ப புதிய கொள்கைகளை கொண்டதாக தமிழக பட்ஜெட் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சென்னை : கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை சமாளித்து, தொழில்துறையில் தொடர்ந்து முன்னோடியாக இருப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கிய பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் 2018 இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட்ஜெட்டில் அரசு செய்ய வேண்டியது என்ன இங்கே பார்க்கலாம்?
மாநில அரசின் பட்ஜெட்டை இரண்டு வகைகளாக பிரிக்கலாம், அவை வருவாய் மற்றும் மூலதனம். கடந்த சில ஆண்டுகளாகவே மாநில பட்ஜெட்டில் வருவாய்க்கான பற்றாக்குறை என்பது அதிகம் இருக்கிறது. மூலதன கணக்கில் உபரி நிதி மூலம் அவை ஒழுங்குமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
2017-18 நிதியாண்டில் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 15,930 கோடியாகவும், மூலதன உபரி ரூ. 14,157 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை என்பது ரூ. 1,773 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூலதனஉபரி மூலம் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்ற விகிதத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் 8 சதவீத பங்காற்றுவதுடன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஆனால் தற்போதைய நிதி நிலைமையே நீடித்தால் தமிழகம் ஜிடிபி வளர்ச்சியில் தலைமை வகிப்பது தொடருமா என்பது தான் இப்போதைய கேள்வி.
தமிழகம் உற்பத்தி மாநிலம் மட்டுமின்றி வாங்கும் திறன் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது. எனினும் ஏழாவது ஊதிய கமிஷனை அமல்படுத்துவதன் மூலம் ரூ. 14,719 கோடி இழப்பு ஏற்படும். எனவே வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசு வருவாய் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.
பராமரிக்க முடியவில்லை
பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, குடிநீர் வாரியம், மின்சாரத்துறை மற்றும் வீட்டு வசதி வாரியங்கள் தொடர்ந்து நஷ்டங்களிலேயே இயங்கி வருகின்றன. சாதாரண குடிமக்களுக்கும் குடிநீர், மின்சாரம் போக்குவரத்து உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, எனினும் பணக்காரர்களும் இந்த மானியங்களை அனுபவிப்பதாலேயே குடிநீர், மின்சாரம், போக்குவரத்து கழகங்களை சரியாக பராமரிக்க முடியாமல் நஷ்டத்தை சந்திக்கின்றன.
மாநிலம் முழுமைக்கும் பலன்
சில தொழில்முறை மற்றும் சேவை சார்ந்த விஷயங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த நிலையை தக்கவைக்க புதிய தொழிற்சாலைகளை பெருநகரங்களில் மட்டுமே நிறுவாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைத்து அதன் பலனை மாநிலம் முழுவதும் பெற வகை செய்ய வேண்டும்.
கல்வி, சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி
கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். முதலீடு செய்ய தமிழகம் சிறந்த மாநிலம் என்று கூறிக்கொண்டே இருப்பதைவிட புதுமைகளை ஊக்குவிக்கும் மாநிலம் தமிழகம் என்பது போன்ற சிக்னேச்சர் திட்டங்களை அரசு பிரபலப்படுத்த வேண்டியுள்ளது.
வளர்ச்சிக்கான கொள்கைகள் தேவை
தொழில் செய்ய சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 12வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்த பெருமைகளை மட்டுமே பேசி கொண்டிருக்காமல் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற நட்பு ரீதியான சூழலை உருவாக்கும் விதமான கொள்கைகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மூலதன முதலீடுகள் வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பவையாக மட்டும் இருக்கக் கூடாது. சிறந்த நிதி மேலாண்மையும், வளர்ச்சிக்கான கொள்கைகளும் இந்த பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் அதுவே அரசின் கஜானாவிற்கும், மாநில வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.