மோடி பிரசாரம் செய்தும் 3-ஆவது இடத்துக்கு தேமுதிக, பாமக, மதிமுக
சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையிலான வானவில் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தும் மூன்றாவது இடத்திற்கு பரிதாபமாக தள்ளப்பட்டது.
அதேபோல பாமக போட்டியிட்ட தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் மூன்றாவது இடத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.
மதிமுகவில் வைகோ, கணேசமூர்த்தி தவிர மற்ற 5 வேட்பாளர்களும் 3 இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
பாஜக
தேசிய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பாஜகவிற்கு தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர வேறு எங்கும் வரவேற்பில்லை. தென்சென்னையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் 3 வது இடத்தையே பெறமுடிந்துள்ளது.
கோவையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
வேலூர் ஏ.சி.சண்முகம்
வெற்றி உறுதி என்று நம்பப்பட்ட வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம், இரண்டாம் இடத்தை பிடித்தது கொஞ்சம் ஆறுதலான விசயம். அதேபோல பொள்ளாச்சியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரனும் 2வது இடத்தையே பிடித்துள்ளார்.
மூன்றாம் இடத்தில் ஹெச்.ராஜா
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தஞ்சாவூர் முருகானந்தம், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பரும் ராமநாதபுரம் வேட்பாளருமான குப்புராமு ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
தேமுதிகவின் நிலை
தேமுதிக, திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் போட்டியிட்டது.
திருப்பூரில் 2 வது இடம்
இதில் திருப்பூர் தொகுதியில் மட்டுமே 2-வது இடம் பிடித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேலம் உள்பட பெரும்பாலான தொகுதிகளில் 3-வது இடத்தைதான் பிடித்துள்ளது.
ஏமாந்த சுதீஷ்
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வி.ஐ.பி. வேட்பாளரான எல்.கே.சுதீஷ், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டும், தேமுதிகவால் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை என்பதுதான் சோகம்.
பாமக ஜி.கே.மணியின் நிலை
இதேபோல பாமக 8 தொகுதிகளில் போட்டியிட்டது. தர்மபுரியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், கிருஷ்ணகிரி,மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் முன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
நாகையில் 4ம் இடம்
நாகப்பட்டினத்தில் போட்டியிட்ட பாமக கம்யூனிஸ்ட்கள் தயவினால் 4 வதுஇடத்திற்கு விரட்டப்பட்டது.
மதிமுக வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு விருதுநகரில் வெற்றி உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு 2ம் இடமே கிடைத்தது. அதேபோல கடந்த முறை ஈரோடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பியான கணேசமூர்த்திக்கும் இரண்டாம் இடம் கிடைத்தது.
மதிமுக மல்லை சத்யா
இவர்களைத்தவிர ஸ்ரீபெரும்புதூர் மாசிலாமாணி, காஞ்சிபுரம் சத்யா, தேனி அழகுசுந்தரம், தென்காசி சதன்திருமலைக்குமார், தூத்துக்குடி ஜோயல் என 5 வேட்பாளர்களுமே 3 வது இடத்தையே தொடமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.