ஆட்டத்தை ஆரம்பித்த அக்னி பகவான் - திருத்தணியில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்
வட தமிழகத்தில் அனல் காற்று வீசுகிறது. திருத்தணியில் இன்று 114 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே பல நகரங்கள் சுட்டெரிக்கின்றன. திருத்தணியில் அதிகபட்சமாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். திகுதிகுவென பற்றி எரிகின்றன. பல நகரங்களில் அனலை வாரி இறைத்தது போல வெப்பம் சுட்டெரிக்கிறது.
வெப்பத்தின் பாதிப்பை தாங்க முடியாத மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். வெயில் தணிந்த பின்னர் வெளியில் போகலாம் என்று தங்களின் பணிகளை ஒத்தி வைத்துள்ளனர்.
|
அனலடிக்கும் சென்னை
சென்னையில் நேற்று முதலே வெப்பம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் புழுக்கம் அதிகரித்துள்ளது. கடல் காற்று வீசியும் அனலின் வேகத்தை மக்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
திகுதிகு திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் காலை முதலே வெயில் வாட்டி எடுக்கிறது. இன்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வெப்பம் தாங்காமல் டிரான்ஸ்பார்மர் வெடித்து 4 பேர் காயமடைந்தனர்.
100 டிகிரி பாரன்ஹீட்
கடந்த வாரங்களில் வெப்பம் சற்றே தணிந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் அக்னி பகவான் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அனல்காற்று எச்சரிக்கை
வடதமிழகம், புதுச்சேரியில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்கத்தில் உள், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.