விவசாயிகளுக்காக தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம்... எது ஓடும்? எது மூடப்படும்?
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட முடிவின்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை: விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று அனைத்துக் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தேசிய வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 41 நாட்களாகப் போராடி வந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தை கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் மூஸ்லீம்லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
கடைகள் அடைப்பு
இந்தக் கூட்டத்தில் ஏப்ரல் 25ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும், இதற்கு அனைத்துஅமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும். இதே போன்று கோயம்பேடு வணிக வளாகமும் நள்ளிரவு முதல் இன்று மாலை வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கங்கங்கள் பங்கேற்பு
தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முழுஅடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, சரக்கு வாகனங்களும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
உணவகங்களும் மூடல்
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் இணைகிறது. இதனால் இன்று காலை முதல் மாலை வரை உணவகங்கள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறுத்தம்
தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் 4 லட்சம் லாரிகளும் 75 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக திரையுலகமும் முழு அடைப்பில் பங்கேற்கிறது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப் படுவதோடு, படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
எந்தெந்த கட்சிகள் ஆதரவு
திமுக சார்பில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தில் ஆளும் அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் அரசுப் பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதே போன்று பாஜக, த.மா.கா, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் முழுஅடைப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.