உடுமலைப்பேட்டை சங்கரின் கிராமத்தில் தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஜாதி வெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் உறவினர்களிடம் தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல சங்கரின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கலப்புத் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் சங்கரும், அவரது மனைவி கவுசல்யாவும் உடுமலைப்பேட்டையில் கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானார்கள்.
3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
இந்த நிலையில் சங்கரன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கொமரலிங்கம் கிராமத்திற்கு தேசிய ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் சந்திரபிரபா, லிஸ்டர் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு சங்கரின் குடும்பத்தார், உறவினர்கள், கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் காவல்துறையினரையும் சந்தித்து இந்த வழக்கில் எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தனர். மேலும் கலெக்டரையும் சந்திக்கவுள்ளதாக குழுவின் தலைவரான சந்திரபிரபா கூறினார்.