பசுவதை தடுப்பு சட்டத்தைத் திரும்ப பெறுக... ஸ்டாலின், திருமா உட்பட 7 தலைவர்கள் கூட்டறிக்கை'
பசுவதை தடை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: பசுவதை தடை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை பலி கொடுப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுச்சேரி முதல்வரோ தங்கள் யூனியன் பிரதேசத்தில் அனைத்து தரப்பு கலாசாரங்களை கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் புதுவையில் மாட்டிறைச்சிக்கான தடையை அமல்படுத்த முடியாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
கூட்டறிக்கை
இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் (திமுக), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இ.கம்யூ), தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), கே.எம். காதர்மொகிதீன் (இந்தியன் முஸ்லீம் லீக்) மற்றும் எம்.எச். ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அறிக்கையில் என்ன?
மத்திய அரசின் எதேச்சதிகார செயலை எதிர்த்து மக்கள் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும். மத்திய வனத்துறையின் அறிவிக்கை மாநில உரிமைகளை உதாசீனப்படுத்துவது ஆகும்.
விவசாயிகள் பாதிப்பு
நாடாளுமன்றம் புறக்கணிக்கப்பட்டு ஜனநாயக மரபுகளை மத்திய பாஜக அரசு மீறி உள்ளது. மாடு விற்க தடை விதித்ததால் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரம் நொறுங்க வேண்டும் என மத்திய பாஜக அரசு விரும்புகிறது.
உணவு உரிமை
மத்திய அரசின் அறிவிக்கை உணவுக்கான உரிமையை தகர்த்து எறிகிறது. எதை சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு மத்திய பாஜக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழக அரசு மௌனத்தை கலைத்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மக்களின் கோபத்தை திடை திருப்ப மத்திய பாஜக அரசு முயலுகிறது. தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி கண்டனம் தெரிவிப்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.