சிபிஎம், சிபிஐ, தேமுதிகவினர் 1459 பேர் இன்று திமுகவில் ஐக்கியம் - ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் கூட்டணி குழப்படிகளால் சிபிஐ, சிபிஎம், தேமுதிகவினர் 1459 பேர் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த தருமபுரி மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினர் என்.பி. சிவாஜி மற்றும் பலரும் திமுகவில் இணைந்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் பி.கோவிந்தன் - தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரும் இணைந்துள்ளனர்.
மேலும், தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சி.பி.எம், சி.பி.ஐ, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மற்றும் விவசாய சங்கம், வணிகர் சங்கம், மாதவர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 1,459 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.