தோற்றது நாம் அல்ல, தமிழ்நாட்டு மக்கள்தான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தோற்கவில்லை. தமிழ்நாடு மக்கள்தான் தோற்றுள்ளனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இப்படித் தெரிவித்தார் அவர்.
சென்னை, வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளரும், சென்னை மாநகராட்சி 150வது வார்டு மாமன்ற உறுப்பினருமான காரம்பாக்கம் கணபதி இல்லத் திருமணம் இன்று நடந்தது. அதைத் தலைமையேற்று நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை...
சுயமரியாதை
இன்று நடைபெற்று இருக்கும் இந்த சுயமரியாதை திருமணம் பார்த்து யாரும் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால் தந்தை பெரியார் அவர்களால் இந்த சுயமரியாதை திருமணம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு உணர்வோடு கூறப்பட்டு நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது இப்படி இல்லை
இந்த சிறப்பான தருணத்தில் நாம் எண்ணி பார்க்க வேண்டுவது என்னவென்றால் இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பே நடைபெறும் என்று சொன்னால் அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை. ஆனால் 67-ம் ஆண்டு நம்முடைய அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி முதன் முதலில் தமிழ்நாட்டில் உருவான நேரத்தில் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து முதல் தீர்மானமாக அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் எந்த தீர்மானம் என்று கேட்டால் "சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும்" என்ற தீர்மானம்தான். அந்த அங்கீகாரத்தை அண்ணா அவர்கள் அன்றைக்கு பெற்றுத் தந்தார்.
செல்லுபடியாகும் திருமணம்
ஆகவே இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடி ஆகுமென்ற அங்கீகாரத்தோடு நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம். சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல இது நம்முடைய தமிழ் திருமணம். நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய அழகு தமிழ்மொழியில் நடைபெறக்கூடிய திருமணம். இன்னும் கூட பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால் நம்முடைய தாய்மொழிக்கு தலைவர் கலைஞர் அவர்கள், செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்று தந்திருக்கிறாரே! அப்படிப்பட்ட சிறப்பு மிக்க தமிழ் மொழியில் நடைபெறக்கூடிய திருமணம். அதை தான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல காரணம் நீங்கள் அனைவரும் இதை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.
உயர் படிப்புகள் ஏழைகளுக்கும்
உயர் படிப்புகளை ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் கொண்டு சேர்த்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும் அவரை தொடர்ந்து வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கும் அவர்களின் வழி நம்மை நடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களையுமே சாரும் என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திராவிட இயக்கமே தோன்றியிருக்காவிட்டால் நம் சந்ததியினர் படிக்க முடியுமா? இப்படி பட்டம் பெற முடியுமா? இதை நாம் என்றைக்கும் மறக்க கூடாது.
லண்டனிலிருந்து வந்தேன்
இந்த மண விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து வந்தவுடன் ஓய்வு எடுக்காமல் வந்திருக்கிறேன் என்று இங்கு பேசிய பலர் பெருமையாக மகிழ்ச்சியாக ஏன் சிறப்பு செய்தியாக கூட சொன்னார்கள். அப்படி ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தொண்டர்களின் மகிழ்ச்சிக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் படைக்கு பெருமை சேர்க்கும் இதுபோன்ற தொண்டர்களின் மணவிழா நிகழ்ச்சியில் பங்கு பெறுவது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.
திருவள்ளூரே திரண்டு வந்துள்ளது
இங்கு ஆர்.எஸ். பாரதி அவர்கள் பேசும்பொழுது குறிப்பிட்டுச் சொன்னார் இந்த மணவிழாவிற்கு திருவள்ளூர் மாவட்டமே திரண்டு வந்திருக்கிறது என்று அவர் சொன்னதில் தவறிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டமல்ல சென்னை மாவட்டத்தையும் சேர்த்து ஏன் நம் திருச்சி மாவட்ட செயலாளர் நேரு அவர்கள் கூட வந்திருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த சிறப்பும் கணபதி அவர்களுக்கு மட்டும்தான்.
தோற்றது நாமா.. இல்லை இல்லை...!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். நான் முந்தைய நிகழ்ச்சிகளில் சொன்னதுபோல இந்த
தேர்தலில் நாம் தோற்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் தோற்றிருக்கிறார்கள்.
பதவிக்காகவா போட்டியிட்டோம்
நாம் பதவிக்காக மட்டும் போட்டியிட்டு தோற்றிருந்தால் மூலையில் போய் முடங்கியிருப்போம். ஆனால் தி.மு.க. அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் மட்டுமே எதிர்பார்க்கிற இயக்கம் அல்ல தி.மு.க. மக்கள் பணியை இடைவிடாது இயற்ற வேண்டும் என்று நம் பேரறிஞர் பிறந்த அண்ணா அவர்கள் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டிய இயக்கம்தான். இந்த பெருமைக்குரிய இயக்கம் என்று அவர் பேசினார்.