'சன்'டே முதல் வெளுக்கப் போகும் சிவப்புச் சூரியன்.. இப்பவே எரியுது உடம்பெல்லாம்!
சென்னை: மக்கள் மண்டைகளைப் பதம் பார்க்க இதோ மீண்டும் வந்து விட்டது கத்திரி வெயில். 4ம் தேதி முதல் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கவுள்ளதால் மக்கள் இப்போதே அதிலிருந்து தப்பிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
வருடா வருடம் வரும் இந்த வெயிலின் பிடியில் சிக்கி வறுபடுவது மக்களுக்குப் பழக்கமாகி விட்டது என்ற போதிலும் ஒவ்வொரு முறையும் ஒரு தினுசான கத்திரியை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை காலம் எப்போதுமே தகிக்கும் என்ற போதிலும் இந்த முறை சற்று கூடுதலான வெப்பம் தமிழகத்தைத் தாக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
4ம் தேதி முதல்
4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை அனல் பரப்பும்.
தென் தமிழகத்தில் ஜில் ஜில்
தமிழகத்தின் தென் பகுதிகளில் தற்போது கோடை மழை களை கட்டியுள்ளது. அடை மழையால் பல பகுதிகளில் மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
அங்கு வெப்பம் குறையும்.. ஆனால் போகப் போகத் தெரியும்
எனவே இந்தப் பகுதிகளில் கத்திரி ஆரம்பிக்கும்போது சற்று அனல் குறைவாக இருக்கலாம். இருப்பினும் போகப் போகத்தான் வெயில் படுத்தும் பாட்டை உணர முடியும்.
இப்போதே 100
இப்போதே பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டுகிறது.
பேர் பாடியுடன் உக்காந்தாதான் சுகம்
வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. சட்டை கிட்டை போடாம அப்படியே இருந்தால் அவ்வளவு சுகமாக இருக்கும் என்பதுபோல வெயில் அப்படி ஓவராக இருக்கிறது.
112 வரை போகலாம்
கடந்த முறை அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் வாட்டியது. இந்த முறை 112 டிகிரி வரை வெயில் எகிறலாம் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நிறைய குடிங்க... தண்ணீர்
இந்த வெயிலுக்கு சூட்டிலிருந்து தப்ப ஒரே வழி நிறைய தண்ணீர் குடிப்பதுதான். இளநீர் போன்றவற்றையும் தினசரி எடுத்துக் கொண்டால்தான் தப்பலாம் சூட்டிலிருந்து..