மாயமான வேந்தர் மூவிஸ் மதனை பிடிக்க நாளையோடு கெடு முடிகிறது... போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சென்னை: மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் வசூல் செய்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் மதனை பிடிக்க செப். 21ந் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. நாளையோடு கெடு முடிவடைய உள்ள நிலையில் போலீசார் மதனைத் தேடும் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக வேந்தர் மூவிஸ் மதன் சுமார் 80 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும், 109 பேரில் 14 பேர் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இதனிடையே மதனின் தாயாரும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஏன் இன்னும் மதனை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், செப்டம்பர் 21ந் தேதிக்குள் மதனை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, உயர்நீதிமன்றம் போலீசாருக்கு அளித்த கெடு நாளையோடு முடிவடைகிறது. இதனால் மதனை தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதனின் உறவினர்கள், நண்பர்கள் என மதனுடன் மிக நெருக்கமாக இருந்த அனைவரிடமும் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மதனை பிடிக்க 2 காவல்துறை உதவி ஆய்வாளர்கள், 7 ஆய்வாளர்கள் கொண்ட குழு தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றத.