''நிரூபிக்கத் தவறி விட்டீர்கள்''.. சங்கரராமன் வழக்கில் தமிழக காவல்துறைக்கு பெரும் சறுக்கல்!
புதுச்சேரி: காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் மீதும் சாட்டப்பட்டிருந்த அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் போலீஸார் போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்காததால், ஆதாரப்பூர்வமாக அவற்றை நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி அவர்களை விடுவித்துள்ளதாக கூறுகிறது புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட் இன்று அளித்த தீ்ர்ப்பு.
அரசுத் தரப்பு குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறி விட்டதாக இந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது காவல்துறைக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
ஒருவருக்குக் கூட இந்த வழக்கில் தண்டனை கிடைக்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரண்ம் 82 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி கோர்ட்டில் மாற்றிப் பேசியதே.
மொத்தம் 24 குற்றவாளிகள்
இந்தக் கொலை வழக்கில், ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு, தாதா அப்பு, கதிரவன் உள்பட மொத்தம் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கதிரவன் படுகொலை
வழக்கு விசாரணையில் இருந்தபோதே சென்னையில் வைத்து கதிரவன் ஒரு கும்பலால் பழிக்குப் பழித் தகராறில் கொல்லப்பட்டு விட்டார்.
அப்ரூவர் ரவி சுப்ரமணியம்
இந்த வழக்கில் ரவி சுப்ரமணியம் ஆரம்பத்திலேயே அப்ரூவராகி விட்டார்.
1873 பக்க குற்றப்பத்திரிக்கை
இவ்வழக்கில், மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
370 சாட்சிகள்
வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் ஜெயேந்திரர் தரப்பு என மொத்தம் 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
அரசுத் தரப்பில் 82 பிறழ் சாட்சியங்கள்
அரசுத் தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சிகளில் 82 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதால் வழக்கு நிலைகுலைந்து போனது.
தவறு யார் பக்கம்
பிறழ் சாட்சிகளாக இவர்கள் மாறியதற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. காவல்துறை இவர்களிடம் பெற்ற வாக்குமூலம் சரியான முறையில், சட்டப்பூர்வமான முறையில் பெறப்பட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன. பிறழ் சாட்சிகளாக மாற முடியாத அளவுக்கு சட்டரீதியான பாதுகாப்புடன் இவர்களிடம் ஏன் காவல்துறை சாட்சியங்களைப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.